ஏனாம் புறக்கணிப்பு - பாஜக ஆதரவு சுயேட்சையாக இருந்தும் அரசு ஆதரிக்கவில்லை என எம்எல்ஏ குற்றச்சாட்டு


ஏனாம் புறக்கணிப்படுவதாக சட்டப்பேரவையில் ஆதரவாளர்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ பேரவையில் படிக்கட்டுகளில் பேனர்கள் ஏந்தி நின்றிருந்தார்,

புதுச்சேரி: ஏனாம் புறக்கணிப்படுவதாகவும் பாஜக ஆதரவு சுயேட்சையாக இருந்தும் அரசு தரப்பில் ஆதரவில்லை என்றும் எம்எல்ஏ சீனிவாச அசோகம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் ஆந்திரம் அருகேயுள்ளது. ஏனாமில் இருந்து ஆதரவாளர்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் சட்டப்பேரவைக்கு இன்று வந்தார். முதலில் அனைவரையும் முதல்வர் அறைக்குள் அனுமதிக்கவில்லை. இறுதியில் எம்எல்ஏ, மற்றும் அவருடன் வந்த மக்களையும் அனுமதித்தனர். பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை.

சந்திப்புக்கு பிறகு எம்எல்ஏ சீனிவாச அசோக் கூறியதாவது: ''ஏனாமில் குப்பை விவகாரம் 60 நாட்களாகியும் தீர்வு காணப்படவில்லை. ஆட்சியர், தலைமைச்செயலர் என யாரும் அங்கு வரவில்லை. இது அரசியலாக்கப்படுகிறது. எம்எல்ஏக்கு தவறான பெயர் ஏற்பட வேண்டும் என அங்குள்ள மண்டல அதிகாரி தொடங்கி பலரும் முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

தற்போது 900 கி.மீ பயணித்து புதுச்சேரி வந்துள்ள நிலையில் ஆட்சியர் அங்கு சென்றுள்ளார். எங்களுக்கு அரசு தரப்பில் ஆதரவில்லை. பழிவாங்கும் உணர்வுடன் செயல்படுகிறார்கள். எம்எல்ஏவான எனக்கு அங்கு அலுவலகமே இல்லை. தற்போது முதல்வரை சந்தித்தபோது இரண்டு நாள்களில் சரி செய்து தருவதாக சொல்கிறார். முதல்வரிடம் என்னைப் பற்றி தவறான தகவலை அதிகாரிகளும், முன்னாள் எம்எல்ஏவும் சொல்கிறார்கள்.

பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவான எனக்கே இந்த நிலைதான் உள்ளது. உண்மையில் எனக்கு ஆதரவு அவர்களிடம் இல்லை. பிரச்சினையை சரி செய்ய உதவில்லை. ஏற்கெனவே பல விஷயங்களுக்கு போராட்டம் செய்தும் ஏதும் செய்யவில்லை. ஏனாம் தற்போது புறக்கணிக்கப்படுகிறது. குப்பைகள் அள்ள தொடங்கினால்தான் ஏனாமுக்கு நான் செல்வேன். அதுவரை இங்குதான் இருப்பேன்." என்றார்.

அதைத்தொடர்ந்து ஏனாம் புறக்கணிப்பு, குப்பை அள்ளாதது தொடர்பான பேனர்களுடன் சட்டப்பேரவை படிக்கட்டில் எம்எல்ஏவும் ஆதரவாளர்களும் நின்றுவிட்டு தனது அறைக்கு புறப்பட்டனர்.

x