ராமநாதபுரம்: கமுதி அருகே ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் வயர்கள் எரிந்து சேதம் அடைந்ததால், கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கி நோயாளிகள், பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நிலையத்தை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் உள்ள மின் ஒயர்கள் சேதம் அடைந்து பலமுறை மின் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துகளில் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை என்றாலும், அவ்வப்போது மின் ஒயர்களில் தீப்பொறி ஏற்படுவதால் பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள், இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மின் ஒயர்கள் எரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது தற்காலிகமாக 2 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ராமசாமிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் சிகிச்சைக்கு செல்லவே அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவப் பணியாளர்கள் இரவு நேரங்களில் தங்கி பணியாற்ற அச்சமடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக மின் ஒயர்களை அமைத்து, பணியாளர்கள், நோயாளிகளின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.