புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்: முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு


புதுச்சேரி: புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி புதிய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்ட திட்டமிடப்பட்டது. இப்பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.29.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் ஒருபுறம் தொடங்கி நடக்க, தொடர்ந்து அதே பகுதியில் பேருந்து நிலையம் இயங்கியது. பேருந்து நிலையத்தை முழுமையாக காலி செய்து கொடுத்தால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க முடியும் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 16-ம் தேதி பேருந்து நிலைய வளாகம் முற்றிலுமாக காலி செய்யப்பட்ட நிலையில் ஏஎப்டி மைதானத்தில் தற்காலிகமாக பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. இதன்பிறகு பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.

சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் போக்குவரத்து முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கடைகள், உணவகங்கள், பயணிகள் காத்திருப்பகம், போக்குவரத்து அலுவலகம், பயணச்சீட்டு பதிவகம், ஆம்னி பேருந்து அலுவலகங்கள், இரு பயணிகளுக்கான இரவு தங்கும் அறைகள், விசாரணை அலுவலகம், தகவல் மையம், முதலுதவி அறை, கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், மின் அலுவலகம், பொருள் காப்பகம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 46 பேருந்துகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வருவதற்கும், செல்வதற்கும் என இரண்டு வழிகள், பொதுமக்கள் வருவதற்கு மைய பகுதியில் தனியாக ஒரு வழி என 3 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பேருந்து நிலையத்தின் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு காத்துள்ளது.

கடந்த ஆண்டே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதனை உடனே திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதிமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ரங்கசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு சில மாறுதல்களையும், வழிமுறைகளையும் குறிப்பிட்டு கூறினார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் பேருந்து நிலையம் அமைப்பு குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது எம்எல்ஏ நேரு(எ) குப்புசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்ட உயர் அதிகாரி ருத்ரகவுடு, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதே நேரத்தில் பேருந்து நிலையம் வரும் 30-ம் தேதி அல்லது மே 4-ம் தேதிகளில் திறக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

x