வாணியம்பாடி: தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலி தொழிலாளி ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (33) இவர், சென்னையில் ராட்டினம் சுற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், குணால் (9) என்ற மகனும், சஞ்சனா (8) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், சென்னைக்கு வேலைக்கு செல்ல வாணியம்பாடி ரயில் நிலையம் யார்டு பகுதியில் தண்டவாள த்தை பிரசாந்த் நேற்று கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மீது மோதியதில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை
ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் சந்துரு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.