கோவை: கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கோவையில் செட்டிபாளையம் கிராமம், எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஞாயிற்றுகிழமை(ஏப்ரல் 27-ம் தேதி) நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்கள் விவரங்களை coimbatore.nic.in என்ற இணையதள முகவரியல் பதிவு செய்ய வேண்டும். இன்று ஏப்ரல் 24-ம் தேதி முற்பகல் தொடங்கி நாளை ஏப்ரல் 25-ம் தேதி பிற்பகல் வரை மட்டுமே இணையவழி மூலம் பதிவு செய்ய முடியும்.
மேலும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.' இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.