எடப்பாடியாரை வணங்கி உரையை தொடங்குகிறேன்... சட்டசபையை அலறவிட்ட செங்கோட்டையன்!


சென்னை: இன்றைய சட்டசபை விவாதத்தில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன், “ எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திய எடப்பாடியாரை வணங்கி உரையை தொடங்குவதாக” தெரிவித்தது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணியை முறித்த அதிமுக தற்போது மீண்டும் அக்கட்சியோடு கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்து கொடுத்தார்.

இந்த இரவு விருந்தில் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவருந்தினார். நேற்று நடந்த இந்த இரவு விருந்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. கடந்த சில வாரங்களாகவே எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்றைய புறக்கணிப்பு பல யூகங்களை கிளப்பியது.

இந்த சூழலில் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் அதிமுக சார்பில் பங்கேற்று பேசினார். அப்போது, “ எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திய எடப்பாடியாரை வணங்கி உரையை தொடங்குவதாக” தெரிவித்தார். இருவருக்கும் இடையே உரசல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென செங்கோட்டையன் இவ்வாறு பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

x