ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்திற்கு கீழே வீட்டுமனை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்று இடம் வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் 17 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். அவர்களுக்கு பிள்ளையார்குளம் ஊராட்சியில் அரசு கலை கல்லூரி எதிரே வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் உள்ளதால் அங்கு வீடு கட்ட முடியாது என்பதால் வட்டாட்சியரிடம் முறையிட்டனர்.
மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில் இரு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனர்.