விவசாயிகள் கவனத்துக்கு... கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பஞ்சகவ்யம் விற்பனை!


தூத்துக்குடி: கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘கோவில்பட்டி போன்ற வறண்ட நிலப் பகுதிகளில், கோடைக்காலம் தாவர வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும். ஆனால், பஞ்சகவ்யம் பசுமையைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த தாவர ஊக்கியாகும். பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் ஆகிய 5 முக்கிய இயற்கை சேர்மங்களை ஒருங்கிணைத்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம், தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பூச்சித் தாக்கத்தைத் தடுக்கவும் உதவும். மாடித் தோட்டம் வைத்திருக்கும் பெண்கள் மற்றும் வீட்டுப் பூங்கா பராமரிப்பில் ஈடுபடும் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

வீட்டிலேயே முருங்கை, தக்காளி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், கத்தரிக்காய், பப்பாளி, கொய்யா போன்ற பழம் மற்றும் காய்கறிகளையும், ரோஜா, பிச்சி, மல்லிகை போன்ற மணமிக்க பூச்செடிகளையும் பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி வளர்க்கலாம். இது, சிறந்த விளைச்சலைத் தரும். குறைந்த செலவில் இயற்கை விளை பொருட்களை உருவாக்கும் பஞ்சகவ்யம், தற்போது கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தும் முறை மற்றும் வெவ்வேறு பயிர்களுக்கான அளவுகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x