‘மக்கள் ஆதரவு எனக்கே உள்ளது; 2026 சட்டமன்றத் தேர்தலில் பாருங்கள்’ - சசிகலா சவால்


திருவாரூர்: மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதால் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழி சசிகலா தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், திமுக அரசு தற்போது வரை ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. அதற்கு ஆண்டுதோறும் வட்டி கட்டி கொண்டிருந்தால், எப்படி மக்களுக்கான நலத் திட்டங்களை வழங்க முடியும்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எந்தவித நன்மையும் திமுக அரசு செய்யவில்லை. மக்கள் தன்னுடன் உள்ளதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது பங்கு மிக மிக அதிகமாக இருக்கும். திமுக அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என தெரிவித்தார். பேட்டியின்போது, சசிகலாவின் தம்பி திவாகரன், முன்னாள் அமைச்சர் உளுந்தூர்பேட்டை ஆனந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

x