சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், "நீர் பாசனம் அதிகம் உள்ள, நெல் வயல்கள் அதிகமாக உள்ள சாலைகள், காட்டுமன்னார்கோயில் போன்ற டெல்டா பகுதிகளில் அதிகமாக உள்ளன. இப்பகுதிகளில் சாலைகள் மாநில அளவிலான பொது தரத்தில் அமைக்கப்படுகிறது. அதனால் இந்த சாலைகளின் ஓரம் சேறும், சகதியுமாக உள்ளன. எனவே டெல்டா பகுதி சாலைகளுக்கென கூடுதல் தர சாலை அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: மண் தரத்தின் அடிப்படையில் சாலைகளின் ஆயுட் காலம் அமைப்பும். மண் தரம் சரியில்லை என்றால் சாலைகள் விரைவில் சேதமடையும். மண் உறுதியாக இருந்தால் தான், அதில் அமைக்கப்படும் சாலை 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும். சேறும், சகதியுமான சாலைகள் 3 ஆண்டுகளிலேயே சேதமடைந்துவிடும்.
முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு சுற்றுப் பயணம் சென்றபோது, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "டெல்டா பகுதிகளில் சாலை அமைத்தால் அதன் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்தார். அதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர்களிடம் தெரிவித்திருக்கிறேன். அந்த ஆய்வறிக்கை அடிப்படையில், சாத்தியம் என்றால், முதல்வர் மற்றும் நிதித் துறையுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.