கிணற்றில் விழுந்த தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் மரணம்: அரியலூரில் பரிதாபம்


அரியலூர்: திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி சூர்யா. இவர் நேற்று மாலை தனது மகன் ரட்சகனுடன் (11) அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கன்றுக்குட்டி ஒன்று அப்பகுதியில் உள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளது. இதைக்கண்ட சூர்யா கன்றுக் குட்டியின் கயிற்றை பிடித்து இழுத்த போது, கன்றுடன் சேர்ந்து அவர் கிணற்றில் விழுந்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த ரட்சகன் தாயை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். அதில் நீரில் மூழ்கி ரட்சகன் உயிரிழந்தார்.

பின்னர், சூர்யாவின் குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார், ரட்சகனின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த ரட்சகன் திருப்பெயர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x