திண்டுக்கல் மாநகராட்சி புதிய ஆணையருக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?


திண்டுக்கல்: மாநகராட்சி புதிய ஆணையராக எம்.செந்தில் முருகன் பொறுப்பேற்றார். மாநகராட்சியிடம் இருந்து தனியார் அபகரித்த சிறுவர் பூங்காவை மீட்பது மற்றும் மாநகராட்சி வருவாயை அதிகரிப்பது, மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல சவால் காத்திருக் கின்றன.

சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணிபுரிந்த எம்.செந்தில் முருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று காலை அவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். கடந்த 4 ஆண்டுகளில், இவர் 4-வது ஆணையராக பொறுப்பேற்கிறார். திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிவது எளிதல்ல என்பது இங்கு பணிபுரிந்த ஆணையர்களுக்கு தெரியும். அதிக அரசியல் அழுத்தத்தையும் கடந்து, மக்களுக்கு பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி காந்தி மார்க்கெட், பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகமே வசூல் செய்கிறது என்ற பெயரில், தனியாருக்கு ஒரு பகுதி வருவாய் செல்வதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகிறது. இதை சீர் செய்து முழு வருவாயையும் மாநகராட்சிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் அல்லது முறையாக ஏலம் விட்டு முழு தொகையையும் மாநகராட்சிக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகல்நகர் பகுதியில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12-வது கிராஸில் உள்ள சிறுவர் பூங்கா (10 ஆயிரம் சதுர அடி) தற்போது தனியாருக்கு பட்டா போடப்பட்டுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 2-வது வார்டு கவுன்சிலர் கணேசன் அளித்த புகாரில், முந்தைய ஆணையர் ரவிச்சந்திரன் வீட்டு வசதித் துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு சிறுவர் பூங்காவை மீட்பது குறித்து கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை அதை மீட்க நடவடிக்கை இல்லை. அரசியல் அழுத்தத்தையும் கடந்து சிறுவர் பூங்காவை மீட்க புதிய ஆணையர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என 2-வது வார்டு பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி அபராதம் விதிக்க ஆட்சியர் உத்தரவிட்டும், அதை தொடர்ந்து செயல்படுத்தவில்லை. எனவே ஆட்சியர் உத்தரவுக்கு மதிப்பளித்தாவது சாலையில் திரியும் மாடுகளை கட்டுப் படுத்த வேண்டும்.

நடைமுறையில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில், தினமும் ஏற்படும் குளறுபடிகளால் கழிவுநீர் சாலையில் செல்வது வாடிக்கையாக உள்ளது. திண்டுக்கல்லில் உள்ள பூங்காக்கள் பெரும்பாலானவை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை புதிய ஆணையர் செந்தில்முருகன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

x