மதுரை: மாநகராட்சியில் 100 வார்டுகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பழைய வடிகால்கள் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.3372.23 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.430 கோடியில் பணிகள் நடைபெறவுள்ளன. மேலும் சிறப்புத் திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் ரூ.22.56 கோடியில் பணிகள் தொடங்கவுள்ளதாக நேற்று நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பழைய மழைநீர் வடிகால்களை புனரமைக்கும் பணிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்டிஒ சாலினி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் 5 வடக்கு மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில், ஹைதராபாத் ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனம் சார்பில் திட்ட அறிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மொத்த பரப்பளவு 148 ச.கி.மீ. இதில் 5 மண்டலங்களாக உள்ளன. மாநகராட்சியில் மொத்த சாலையின் நீளம் 1,710 கி.மீ. மழைநீர் வடிகால்கள் உள்ள சாலையின் நீளம் 512.5 கி.மீ. மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்காக 7 மண்டலங்களாக பிரித்துள்ளோம்.
இதில் மாநகராட்சிப் பகுதியில் பெய்யும் மழை நீர் வைகை ஆற்றில் கலப்பது போல் தான் இயற்கையாகவே தண்ணீர் வாட்டம் அமைந்துள்ளது. இதில் புனேயிலுள்ள அரசு நிறுவனம் சார்பில் மதுரையில் கடந்த 50 ஆண்டுகளில் பெய்த மழைப்பொழிவின் அடிப்படையில் மழைநீர் வாய்க்கால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இடங்களாக 181 இடங்கள் கண்டறியப் பட்டு ள்ளன. இதில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் புதிதாக மழைநீர் வடிகால்கள், பழைய வடிகால்கள் புனரமைக்கப் படவுள்ளன.
கால்வாய்கள் இரு புறமும் சிமிண்ட் கால்வாய்கள் கட்டப்பட உள்ளன. மேலும் தரைப்பகுதியில் கான்கிரீட் தளங்களாக அமைக்கப்பட உள்ளன. கரைகளை பலப்படுத்துதல், கொள்ளளவு அதிகரித்தல், நீர் நிலைகளில் சேரும் நீரின் தரத்தை மேம்படுத்துதல், உள்சாலைகளில் வடிகால் மேம்பாடு பணிகளுக்காக வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.3,372.23 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.430 கோடிகள் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. இதில் சிறப்பு திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயில் ரூ.11.44 கோடி, தெற்கு மாசி வீதி ரூ.1.52 கோடி, பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.9.60 கோடி உட்பட மொத்தம் 22.56 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
இதில் பங்கேற்றவர்கள், கிருதுமால் நதி கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி தடை ஏற்படுவதால் சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது. மேலும் நாகனாகுளம் கண்மாய், ஊமச்சிகுளம் கண்மாய்களுக்குரிய கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை அகற்ற வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் கடைகளுக்கு பாதிப்பின்றி புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு சம்பந்தப்பட்ட மண்டலத் தலைவர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தி கருத்துகள் ஏற்கப்படும் என ஆணையர் சித்ரா தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பழைய வடிகால்களை புனரமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.