மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்தரை வீதிகளில் சேரும் குப்பையை எளிதில் அகற்றிட மாநகராட்சி ஆணையர் முயற்சியால் ‘பசுமை மாறா மூங்கில் குப்பைக்கூடைகள்’ வைக்கப்பட்டுள்ளன, இந்த ஏற்பாடு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப் 29.ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவும், இக்கோயில் விழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. விழா நாட்களில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேர்த்தி ருவிழா மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சாதாரண நாட்களிலேயே நாள்தோறும் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி, தினமும் 20 டன் குப்பை சேகரமாகும். திருவிழா நேரத்தில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் 30 டன் வகை குப்பை சேரும். இந்த குப்பையை எளிதில் அகற்றிட மாநகராட்சி ஆணையர் சித்ரா முயற்சியால் ‘பசுமை மாறா மூங்கில் குப்பைக் கூடைகள்’ வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி நகர்நல அதிகாரிகள் கூறுகையில், ”கோயிலுக்கு வருகிறவர்கள் ஒரே இடத்தில் நிற்பதில்லை. அவர்கள் சித்திரை வீதிகள், மாசி வீதிகளில் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்கள் வரும்போதும், திரும்பி செல்லும்போதும் கைகளில் குடிநீர், குளிபான பாட்டில்கள், சாப்பாடு பார்சல், பூக்கள்,
பிரசாதம் மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு வருகிறார்கள். அவற்றை பயன்படுத்திவிட்டு கடந்த காலத்தில் கோயிலை சுற்றி சித்திரை, மாசி வீதிகளில் வீசி செல்கிறார்கள். அந்த குப்பையை அப்புறப்படுத்த தூய்மைப் பணியாளர் மிகுந்த சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்கள் எப்போதும் வேலை பார்த்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
இந்த சிரமத்தை போக்கவும், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், குப்பையை கண்ட இடங்களில் போடாமல் இருக்கவும் கோயிலை சுற்றி சித்திரை வீதிகளில் பசுமை மாறா மூங்கில் கூடைகள் வைக்கப்பட்டுள்லன. இதை தொடர்ந்து மாசி வீதிகளிலும் வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
குப்பையை கொண்டு வரும் பக்தர்கள் 8 அடிக்கு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பையை கூடையை பார்த்ததும் குப்பையை கீழே போட மனசு வராது. அவர்களும் குப்பை கூடையை தேடி அலைய வேண்டியதில்லை. மாநகராட்சி ஆணையரின் இந்த திட்டத்தால் தற்போது சித்திரை வீதிகள் சுத்தமாக காணப்படுகின்றன.
அதுபோல், ஒவ்வொரு கோபுரம் அருகேயும் பச்சை பெட்டிகள் வைத்துள்ளோம். அதில் பிளாஸ்டிக் மற்றும் மறு சுழற்சி செய்ய முடியாத குப்பையை போடலாம். இந்த குப்பை கூடைகளில் சேகரமாகும் குப்பையை உடனுக்குடன் தூய்மை பணியாளர்கள் சேகரிப்பது எளிமையாக உள்ளது என்று கூறினர்.