பெண்களை இழிவாக பேசிய பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்


சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போலீஸார் நடவடிக்கையும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று கருத்து தெரிவி்த்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அன்பகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த சூழலில், சொத்து குவி்ப்பு வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மறுஆய்வு மனுவை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘பொன்முடியின் இந்த வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, ஏப்ரல் 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக காவல் துறைக்கு கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆகியோர் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இல்லை என்று கூறி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துவிட்டனர். எனவே, அதே விவகாரத்தை மீண்டும் விசாரிக்க அவசியம் இல்லை. அமைச்சரின் முழுமையான பேச்சு தொடர்பான வீடியோவும் வெளியாகவில்லை.

அதில் ஒரு பகுதிதான் வெளியாகியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு குறித்து உள்ளரங்கு கூட்டத்தில் அமைச்சர் பேசியுள்ளார். அவரது முழுமையான பேச்சை கேட்காமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது: பெண்களையும், தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவம், வைணவத்தையும் இழிவுபடுத்தும் வகையி்ல் அமைச்சர் பொன்முடி பேசியது ஏற்புடையது அல்ல. இதன்மூலம், சைவ, வைணவ சமயத்தினர் மற்றும் பெண்களின் மனதை புண்படுத்தியுள்ளார். அவரது வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது தமிழக போலீஸார் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது.

பொன்முடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிருப்தி அளிக்கிறது. வெறுப்பு பேச்சுகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவு வாயிலாக சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, அந்த சலுகையை தவறாக பயன்படுத்தி இதுபோல பேசியுள்ளார்.

எனவே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்கும் வகையில் இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

x