புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பது குறித்து ஏப்.28-ம் தேதிக்குள் முடிவுசெய்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூனில் கைது செய்தது. இந்நிலையில் கடந்த 2024 செப். 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் அவர் மீண்டும் அமைச்சரானார்.
இந்தநிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், சாட்சிகளை கலைக்கப்படும் என்ற அச்சம் இருந்தால், விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் நாங்கள் ஜாமீன் வழங்கவில்லை. அவருக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை அவரே முடிவுசெய்துகொள்ளட்டும். இதுதொடர்பாக ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிவுசெய்து பதில் அளிக்க வேண்டும் என உதரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.