சென்னை: தமிழகத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை பெற்றவர்கள் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மத்திய அரசின் குடிமைப் பணிகள் (UPSC - சிவில் சர்வீஸ்) தேர்வில் தமிழக அரசின் ”நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
நம்முடைய அரசு கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளின் பலனை இப்பொழுது கண்கூடாக பார்த்து வருகிறோம். வெளிவந்துள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள், ஒட்டுமொத்த தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசு பணிகளை பொறுத்தவரை, 2016-ம் ஆண்டு வரை, தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 மாணவர்கள் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். ஆனால், 2016-க்கு பிறகு அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக, 2021-ல் மட்டும் 27 பேர் மட்டுமே இந்த தேர்வில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற அந்த ஒரே நோக்கத்தோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலமையிலான அரசு, நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை கடந்த 2023-ம் ஆண்டு நாம் தொடங்கினோம். சிறப்புத்திட்ட செயலாக்க துறையின்கீழ் செயல்படும் இந்த பிரிவுக்காக முதல்வர் ரூ.10 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.
இதன்மூலம் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வின் மூலம் 10 மாதங்களுக்கு தலா ரூ.7,500, முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தலா ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 2023-2024-ம் ஆண்டிலேயே, 47 தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றனர். முந்தைய ஆண்டுகளைவிட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகமாகும். அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஊக்க தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தால் பயன் பெற்றவர்கள்.
நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த சிவச்சந்திரன் தேர்வில், தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 23-வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல், மோனிகா அகில இந்திய அளவில் 39-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சிவில் சர்வீஸ் முதல்நிலை, முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்காக, டெல்லி செல்ல வேண்டும். அப்படி செல்லும் தமிழக மாணவர்களின் பயிற்சி மற்றும் பயண செலவுக்காக தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற அந்த வரலாற்றை மீண்டும் நிலைநாட்டுகிற வகையில், நான் முதல்வன் திட்டம் இதே உறுதியோடு செயல்படும். தமிழகத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை பேருக்கும் இப்பேரவையின் மூலமாக நம்முடைய அன்பையும், வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்வோம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என மக்களுக்கான சேவையில் ஈடுபடவுள்ள நம்முடைய இளைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களுடைய பணி சிறக்கட்டும் என்று இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.