திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக இன்று எம்.செந்தில்முருகன் பொறுப்பேற்றார். மாநகராட்சியிடம் இருந்து தனியார் அபகரித்த சிறுவர் பூங்காவை மீட்பது மற்றும் மாநகராட்சி வருவாயை அதிகரிப்பது, மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல சவால் புதிய ஆணையர் முன் காத்திருக்கின்றன.
சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக பணிபுரிந்த எம்.செந்தில்முருகன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை அவர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சியின் நான்காவது ஆணையராக இவர் பொறுப்பேற்கிறார். மாநகராட்சியில் நிலவும் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய பல பொறுப்புகள் புதிய ஆணையர் முன் சவலாக உள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சி காந்தி மார்க்கெட், பேருந்துநிலையத்தில் மாநகராட்சி நிர்வாக வசூல் என்ற பெயரில் தனியாருக்கு ஒரு பகுதி வருவாய் சென்றடையவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது. இதைச் சீர்செய்து முழுவருவாயையும் மாநகராட்சிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் அல்லது முறையாக ஏலம் விட்டு முழுதொகையையும் மாநகராட்சிக்கு செலுத்தும்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். நாகல்நகர் பகுதியில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஏலம் விட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12-வது குறுக்கில் உள்ள சிறுவர் பூங்கா (10 ஆயிரம் சதுர அடி) தற்போது தனியாருக்கு பட்டா போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டாவது வார்டு கவுன்சிலர் கணேசன் புகாரில், முந்தைய ஆணையர் ரவிச்சந்திரன் வீட்டுவசதித்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு சிறுவர் பூங்காவை மீட்பது குறித்து கடிதம் எழுதினார். இந்த கடிதம் குறித்து வீட்டுவசதித்துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
ஆளுங்கட்சியினர் அழுத்தம் காரணமாக சிறுவர் பூங்கா இடத்தை தனியார் அபகரித்துள்ளதை மீட்க தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணேசன் போராடிவருகிறார்.
மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா இடத்தை மீட்கும் நடவடிக்கையில் அரசியல் அழுத்தத்தையும் கடந்து மக்கள் நலன் கருதி புதிய ஆணையர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இரண்டாவது வார்டு பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து இடையூறாக சாலைகளில் மாடுகளை அப்புறப்படுத்தி அபராதம் விதிக்க ஆட்சியர் உத்தரவிட்டும், அதை தொடர்ந்து செயல்படுத்தவில்லை. எனவே ஆட்சியர் உத்தரவுக்கு மதிப்பளித்தாவது சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவேண்டும். நடைமுறையில் உள்ள பாதாளசாக்கடை திட்டத்தில் தினமும் ஏற்படும் குளறுபடிகளால் கழிவுநீர் சாலையில் செல்வது வாடிக்கையாக உள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள பூங்காக்கள் பெரும்பாலனவை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளது. இவற்றை படிப்படியாக தீர்க்க புதிய ஆணையாளர் செந்தில்முருகன் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் மக்கள் உள்ளனர்.