அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்துக்கும், அதிமுகவின் நலனுக்கும் நல்லதல்ல என்று திருச்சி எம்.பி.யும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சி மாவட்டத்தில் ரயில்வே துறை சம்பந்தமான பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். திருச்சி- எர்ணாகுளம், திருச்சி- பெங்களூரு, திருச்சி- திருப்பதி ஆகிய நகரங்களுக்கு இடையே ரயில்கள் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ரயில்வே அமைச்சரிடம் பேசினேன். முதல் கட்டமாக திருச்சியில் இருந்து திருப்பதிக்கு ரயில் சேவை கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இது தவிர வருங்காலங்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க முயற்சி செய்வேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் மதித்து செயல்பட வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும், துணை ஜனாதிபதியாக இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்பட வேண்டும். மாறாக, அந்த தீர்ப்பை விமர்சிப்பது தவறு.
மதிமுகவில் நிலவிய சில பிரச்சினைகளால் எங்களுக்குள் கோபம் இருந்தது. ஆனால், வைகோவின் மனித நேயத்துக்கு முன்னால் அந்த கோபம் அடிபணிந்துவிட்டது. எங்கள் கட்சியின் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம். வரக்கூடிய காலங்களில் இன்னும் அதிகமாக அரசியல் கற்றுக் கொள்வேன்.
அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்துக்கும், அதிமுகவின் நலனுக்கும் நல்லதல்ல. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் அதிமுக தொண்டர்களு க்கே விருப்பமில்லை. எந்த பின்னணியில் அதிமுக- பாஜக கூட்டணி உருவானது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வாத கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.