புதுச்சேரியில் தற்காலிக ஆளுநர் மாளிகையில் கணபதி ஹோமம் - ஆளுநருக்கு வாழ்த்து


புதுச்சேரி: புதுச்சேரியில் தற்காலிக ஆளுநர் மாளிகையில் கணபதி ஹோமம் இன்று நடந்தது. இந்நிகழ்வில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்று ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த புதுவை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் கட்டடம் வலுவிழந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. அதனையொட்டி, ஆளுநர் மாளிகையை தற்காலிகமாக, கடற்கரை சாலையில் உள்ள பழைய சாராய ஆலை வளாகத்தில் கட்டப்பட்ட கலாசார மையத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுப் பணித்துறை சார்பில் ஆளுநர் மாளிகை மற்றும் அலுவலகத்திற்கு ஏற்றார்போல் கலாசார மைய கட்டடங்களை மாற்றம் செய்யப்பட்டது.

ஆளுநர் மாளிகையை தற்காலிகமாக புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்காக இன்று காலை கணபதி ஹோமம் நடந்தது. போப் ஆண்டவர் மறைவால் நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதால் அரசு விழாவாக நடத்தாமல் கணபதி பூஜை மட்டும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை நடந்தது. பூஜைகளில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய மாளிகையில் முதல் தளத்தில் ஆளுநர் இல்லம் அமைகிறது. தரைத் தளத்தில் ஆளுநர் அலுவலகம், அதிகாரிகள் அலுவலகம், கலந்தாய்வு அறை ஆகியவை இடம் பெற்றுள்ளது. விரைவில் அரசு முறைப்படி புதிய கட்டிடத்திற்கு ஆளுநர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பழமையான ராஜ்நிவாஸ் புதுப்பிக்கும் பணி நடைபெறும்.

x