‘2026 தேர்தலில் எங்களது செயல்பாடும் மிக தந்திரமாக இருக்கும்’ - ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை


பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தந்திரமாக பதிலளித்துள்ளார். அவருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது செயல்பாடும் மிகத் தந்திரமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து இதுவரை நிறைவேற்றவில்லை. இதுகுறித்து நேற்று சட்டப்பேரவையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து அதிமுக எம்எல்ஏ மரகதம் குமாரவேல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், கேள்வி தந்திரமான கேள்வி எனக் குறிப்பிட்டதோடு, இதற்கு மிகத் தந்திரமாக பதில் அளிக்க உள்ளேன். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கைக்கு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ள்ளது. பல அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்துகளை கேட்டு பெற்றுள்ளோம் என்றார்.

இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகும். இதில் நிதி அமைச்சர் மிகத் தந்திரமாக பதில் அளித்தது போல், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது செயல்பாடும் மிகத் தந்திரமாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x