‘மக்களை ஏமாற்றும் திமுகவை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஏமாற்றுவார்கள்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளர் நல்லசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, எங்கள் கூட்டணி தமிழக மக்களின் துணையோடு மாபெரும் வெற்றிபெறும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகின்றன. ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். தொடர்ந்து அங்கம் வகிப்போம்.
திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியோடு கருணாநிதி கூட்டணி வைத்திருந்தார். திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். திமுக ஆட்சி துக்ளக் ஆட்சி மாதிரி நடக்கிறது. நடப்பது ஒரு காமெடி ஆட்சி. இந்த ஆட்சியில் கட்டுமானத் தொழில் மட்டுமல்லாமல், அனைத்து தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
இந்த ஆட்சி முடிவுக்கு வந்தால்தான் அனைத்து தொழில்களிலும் உள்ள பாதிப்புகள் நீங்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, மக்களை ஏமாற்றும் திமுகவை மக்கள் ஏமாற்றுவார்கள். தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைக்கிறோம் என்றார்.