மதுரை விளாங்குடியில் நீர்மோர் பந்தல் திறப்பதில் திமுக - அதிமுக இடையே போட்டி


மதுரை விளாங்குடியில் நீர்மோர் பந்தல் திறப்பதில் திமுக -அதிமுகவினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் போலீஸாரு டன் சென்று அதிமுக நீர்மோர் பந்தலை அகற்றியதோடு, மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் கைது செய்ததால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் சாலைகள், பொது இடங்களில் நீர்மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர். மாநகரத்துக் குட்பட்ட மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதி தற்போது திமுகவில் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இந்த தொகுதிக்குட்பட்ட மாநகரப் பகுதியில் போட்டிபோட்டு நீர்மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.

மாநகராட்சி 1-வது வார்டில் அதிமுக மேற்கு 6-ம் பகுதி அதிமுக சார்பில் விளாங்குடியில் மதுரை-திண்டுக்கல் சாலையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். இதற்கு கூடல் புதூர் காவல் நிலைய போலீஸார் அனுமதி மறுத்து, அந்த நீர்மோர் பந்தலில் ‘நோட்டீஸ்’ ஓட்டியதாக கூறப்படுகிறது.

அந்த நோட்டீஸில், ‘தாங்கள் பந்தல் அமைத்திருக்கும் இடத்துக்கு அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அதனால் மதுரை மாநகராட்சி சார்பில் அனுமதி மறுத்து காவல் நிலையத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. தாங்கள் நீர்மோர் பந்தல் அமைக்கும் பகுதி நெடுஞ்சாலைத் துறை என்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதிமுகவினர் நீர்மோர் பந்தலை அகற்ற முன்வராததால், நேற்று மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் கோபு, உதவி செயற்பொறி யாளர் கண்ணன் தலைமையில் போலீஸார், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நீர்மோர் பந்தலை ஆய்வு செய்து அதனை அப்புறப்படுத்தினர்.

இதனால் அதிருப்தியடைந்த அதிமுகவினர் 30-க்கும் மேற்பட்டோர், அதிகாரிகளை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. திமுகவினரும் அப்பகுதியில் திரண்டதால் கூடல் புதூர் போலீஸார், அதிமுகவினர் 20 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணை செயலாளர் எம்.கந்தன் கூறுகையில், இதே பகுதியில் 100 மீட்டர் தொலைவில் பாத்திமா கல்லூரி பின்புறம் திமுகவினர் பொது இடத்தில்தான் நீர்மோர் பந்தல் வைத்துள்ளனர். ஒரு நீர்மோர் பந்தலை அகற்ற தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், மாநகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என அனைவரும் வந்தது இதுவே முதல் முறையாக இருக்கும்" என்றார்.

ஆணையரிடம் செல்லூர் ராஜூ புகார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், "மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் புகார் தெரிவித்தோம். அவர் நான் நீர்மோர் பந்தலை அகற்ற கூறவில்லை என்கிறார். அப்படியென்றால் மாநகராட்சி அதிகாரிகள் யார் உத்தரவுப்படி செயல்படுகின்றனர். பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுப்பது ஒரு குற்றமா ? மாநகராட்சி சாலைகள் முழுவதிலும் ஏராளமான கடைகளை வைத்து திமுகவினர் வசூல் செய்கின்றனர்.

அதையெல்லாம் அகற்ற அதிகாரிகள், காவல் துறையினருக்கு நேரமில்லை. ஆனால், மக்கள் தாகம் தீர்க்க, எங்கள் செலவில் வைத்த நீர்மோர் பந்தலை அகற்றுகின்றனர். இந்த விவகாரத்தை நான் விடப்போவதில்லை. சம்பந்தப்பட்ட திமுகவினர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளேன்" என்றார்.

x