கனிமங்கள் மீதான ராயல்டியை குறைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்தில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்கள் மீதான ராயல்டியை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ராயல்டி, டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுவதால் கன மீட்டருக்கு ரூ.90 என்ற நிலையில் இருந்து ரூ.165-ஆக உயர்ந்துள்ளது. அதை மீண்டும் ரூ.90-ஆக குறைப்பதுடன், புதிதாக டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நிலவரியையும் ரத்து செய்ய வேண்டும் என கல் குவாரிகள், கிரஷர்கள், சரக்குந்து உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இவர்களது கோரிக்கைகள் குறித்து இருமுறை பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டது. அதற்கு பதிலாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்ள கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களு க்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஒரு யுனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம். சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே மிகவும் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கட்டுமானப் பொருள்களின் விலை 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பதால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால், கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழக்கவும் நேரிடும். எனவே, தமிழகத்தில் கனிமங்களுக்கு உயர்த்தப்பட்ட ராயல்டியை குறைக்கவும், புதிதாக விதிக்கப் பட்ட சிறு கனிம நில வரி விதிப்பை கைவிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

x