தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடிவடிக்கைகளை கண்டித்து, வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் இரா.முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி., மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.பழனிசாமி, டி.ராமசாமி, பி.பத்மாவதி மற்றும் டி.எம்.மூர்த்தி, எம்.ரவி உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தர் பதவியில் தானே தொடர்வதாக அவரே கருதிக்கொண்டு செயல்படுவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாரத்துக்கு எதிராக சவால் விடுவதாக உள்ளது. தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தராக ‘அரசு’ செயல்படும் என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். ‘அரசு’ என்பதன் மெய்ப் பொருள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவையாகும்.
ஏனெனில், இந்திய அரசியலமைப்பு, ஜனநாயக அரசியல் அமைப்பு என்பதால், சட்டப்பேரவைக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. ஆளுநர் என்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையின் வழிகாட்டுதல்கள் பற்றி கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் என்பது அவருடைய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது.
இந்நிலையில், துணை வேந்தர்களின் கூட்டத்தை ஊட்டியில் கூட்டியிருப்பதும், அதில் பங்கு பெற குடியரசு துணைத் தலைவரை அழைத்திருப் பதும் தனது சட்ட விரோத மனப்பான்மையில் இருந்து ஆளுநர் இன்னும் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உறைபொருளும், மறைபொருளும் சுட்டிக்காட்டுவது, தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் வேந்தராக சட்ட விரோத மாக செயல்பட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி வேந்தராக தொடர முடியாது என்பதே ஆகும். எனவே, மாநில அரசு உரிய சட்ட ஆலோசனை களை பெற்று, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற வேண்டும். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்கு துணையாக குடியரசு துணைத் தலைவரின் வருகையையும் கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் 25-ம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.