நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சரசு (58). இவர், அஞ்சல் துறையில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு, ஸ்கூட்டரில் மசினகுடி திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை, ஸ்கூட்டரை துதிக்கையால் தாக்கியது.
இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். யானையிடமிருந்து தப்பித்து ஓட முயன்றனர். சரசுவை யானை தாக்கியது. படுகாயமடைந்த சரசு, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மசினகுடி வனச்சரகர் பாலாஜி தலைமையிலான வன ஊழியர்கள் தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர்.