நாமக்கல் அருகே கோயில் வழிபாட்டில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை


நாமக்கல் அருகே கோயில் வழிபாடு தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் அருகே வீசாணம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, இக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த முயன்றபோது, மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தை அகற்றி கிணற்றில் வீசினர். மேலும், திருவிழா நடைபெறாது எனக் கூறினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நாமக்கல் கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் நேற்று இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சுமுக நிலை எட்டப்படவில்லை. இதையடுத்து, அங்கு தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

x