பொங்கல் பண்டிகைத் தேவைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு விதைப்பு பணிகள் மும்முரம்!


சின்னமனூர் புறவழிச்சாலை அருகே உள்ள வயல்களில் விதை கரும்புகளை நடவு செய்யும் தொழிலாளர்கள் | படம்: என்.கணேஷ்ராஜ்.

சின்னமனூர்: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தேவைக்காக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கரும்பு விதைப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் பெரியகுளம், சின்னமனூர், தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு விவசாயம் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையின் போது கரும்பின் தேவை அதிகம் இருக்கும். இதை கணக்கிட்டு இப்பயிர் விளைவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகையின் போதே கரும்பின் தேவை தொடங்கி விடும். இதற்காக தேனி மாவட்டத்தில் கரும்பு விதைப்பு கடந்த 2 நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "கரும்பு பயிருக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். 7 முதல் 8 மாத பயிரான கரும்பு நவம்பர், டிசம்பரில் அறுவடைக்கு வந்து விடும். ஆகவே தற்போது நடவு செய்து கொண்டிருக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 20 கட்டு விதை கரும்புகள் தேவைப்படும். இவற்றை துண்டு துண்டாக வெட்டி மண்ணில் லேசாக புதைக்க வேண்டும்.

கரும்பின் கணுப்பகுதியில் இருந்து தளிர்கள் துளிர்த்து வளரும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு முழு கரும்பு வழங்கி வருவதால் கடந்த சில ஆண்டுகளாகவே கரும்புக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது" என்றனர்.

x