கோடை விடுமுறை: திருச்சி - தாம்பரம் இடையே வாரம் 5 நாள் சிறப்பு ரயில்கள்!


சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சியில் இருந்து ஏப்.29 முதல் ஜூன் 29-ம் தேதி வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5:35 மணிக்கு சிறப்பு ரயில் (06190) புறப்பட்டு, அதேநாளில் நண்பகல் 12:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஏப்.29 முதல் ஜூன் 29-ம் தேதி வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3:45 மணிக்கு சிறப்பு ரயில் (06191) புறப்பட்டு, அதேநாளில் இரவு 10:40 மணிக்கு திருச்சியை அடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருபாதிரி புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

x