புதுச்சேரி: ராஜ்நிவாஸ் புதுப்பிக்கும் பணிக்காக புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு ஆளுநர் அலுவலகம், அவரது மாளிகை இடம்பெயருகிறது. இதையொட்டி நாளை காலை கணபதி ஹோமம் நடக்கிறது.
புதுவை துணைநிலை ஆளுநர் அலுவலகம் மற்றும் அவரது வசிப்பிடமான ராஜ்நிவாஸ் சட்டசபை அருகே அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. ராஜ்நிவாஸ் கட்டடம் வலுவிழந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பழமையான கட்டடம், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது.
அதனையொட்டி, ஆளுநர் அலுவலகம் மற்றும் மாளிகையை தற்காலிகமாக, கடற்கரை சாலையில் உள்ள பழைய சாராய ஆலை வளாகத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி செலவில் சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்பட்ட கலாச்சார மையத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் ஆளுநர் மாளிகை மற்றும் அலுவலகத்திற்கு ஏற்றார் போல் கலாச்சார மைய கட்டடங்களை மாற்றம் செய்யும் பணி நடந்தது., மின்சாதனப் பணிகளும் செய்து முடிக்கப்பட்டன. ஆளுநர் மாளிகையை தற்காலிகமாக புதிய கட்டடத்திற்கு மாற்றுவதற்காக நாளை காலை, கணபதி ஹோமம் நடத்துகின்றனர். அதன்பிறகு அதிகாரபூர்வமாக புதிய கட்டடத்திற்கு ஆளுநர் அலுவலகம் மற்றும் குடியிருப்பும் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.