ஊட்டியில் ஏப்.25, 26-ல் ஆர்.என்.ரவி தலைமையில் தன்கர் பங்கேற்கும் துணை வேந்தர்கள் மாநாடு: சலசலப்பு ஏன்?


தமிழ்நாடு மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் துணை வேந்தர்கள் மாநாடு ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டி ராஜ்பவனில் நடைபெறுவதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டின் மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள்/நிறுவனங்களின் துணை வேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டி, ராஜ்பவனில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஏப்ரல் 25-ம் தேதி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறார்.

தேசிய கடன் கட்டமைப்பை செயல்படுத்துதல், பல்கலைக் கழகங்களுக்கிடையேயான கல்வி ஒத்துழைப்புகள், கற்றல் விளைவுகளை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பு, தொழில் முனைவோரை ஊக்குவித்த ல், கற்பவர்களுக்கு திறன் மேம்பாடு, அறிவுசார் சொத்துரிமை மூலம் செல்வத்தை உருவாக்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வில் தொழில்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்கள் மாநாட்டின் நோக்கமாகும். கல்வித்துறை, அரசு மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் பேசுகின்றனர்.

'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எல்லைகள்' என்ற தலைப்பில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் சிறப்புரையாற்றுகிறார். வேகமாக வளர்ந்து வரும் கல்வி நிலப் பரப்பில் உயர்கல்விக்கான ஒத்துழைப்பை வளர்ப்பது, சிறந்த நடைமுறை களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் புதுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு ஏன்?: தற்போது பல்கலைக்கழக வேந்தரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் குறைத்த நிலையில், ஏற்கெனவே துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நடத்தியதாலும் இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது. தமிழ்நாடு பல்கலைக் கழக திருத்தங்கள் சட்ட மசோதாக்கள் உச்ச நீதிமன்ற சிறப்பு அதிகாரம் காரணமாக சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், பல்கலைக் கழகங்களின் வேந்தராக (தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் நீங்கலாக) ஆளுநரே இருந்து வருகிறார்.

வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழக நிர்வாகத்தை அவர் ஆய்வு செய்ய அவருக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவால் அனைத்து பல்கலைக்கழக நிர்வாகங்களின் அதிகாரமும் தமிழக அரசு வசம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை வேந்தர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்ற கேள்வி உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x