தமிழக அரசு சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில், விதி எண்.110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண்.110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: ”தமிழுக்கும் அமுதென்று பேர்; அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ என்ற அழகுத் தமிழின் பெருமையைப் பேசும் வரிகளையும், “புதியதோர் உலகம் செய்வோம், கெட்டப் போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்ற எழுச்சி மிகுந்த வரிகளையும், ‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு!, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்!’ என்னும் போர்ப்பாடல் என திராவிடப் பண்பாடியும், காலத்தை வென்ற பாடல்களை நமக்குத் தந்தவர் பாவேந்தர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.
தமிழை வளர்த்தல் ஒன்று, சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம் அவர். 1929ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா.
முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990ம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கருணாநிதி நாட்டு உடைமையாக்கினார். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்துக்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தார்.
அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும். பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு. அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும்.
எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவே தான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம். இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம்.
இத்தனை சிறப்புக்குரிய பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்.29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். இந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் தமிழ் மொழியையும், பாரதி தாசனின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு 'பாரதிதாசன் இளம் படைப்பாளர்' என்ற விருது வழங்கப்படும். புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும். மாணவர்களிடையே தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும். தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். தமிழ் மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்” என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும். “கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்” என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.
“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு” என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும். “தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.