'சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள், சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் தெரிவித்தார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள். நேர்மைக்கும் உண்மைக்கும் எந்த பக்கமும் பஞ்சம். அதனால் நான் தனித்து நிற்கிறேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
நியமன ஆளுநரை விட மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு தான் அதிகாரம் அதிகம். மக்கள் ஆட்சி என்பது மக்களுக்கான அதிகாரம் ஆகும். பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன். நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை” என்றார்.
அப்போது அதிமுகவை வலுக்கட்டாயமாக பாஜக கூட்டணிக்கு அழைத்தது உண்மையா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்தார்கள் என்பதை சொல்ல வேண்டியது அக்கட்சி யின் பொதுச்செயலாளர் பழனிசாமி தான். செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தம்பி துரை அவர்கள் யாரேனும் சொல்கிறார்களா? அப்படி அவர்கள் சொன்னால் கூட்டணியில் சேர பாஜக கட்டாயப்படுத்தினர் என கூறலாம்” என்றார்.