நாகர்கோவில்: அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், ராஜேஷ்குமார் எம்எல்ஏ உட்பட 3 பேருக்கு, 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் ராஜேஷ்குமார். இவர் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஜோசப், பால்துரை, அவரது மனைவி சுபிதா ஆகியோர், அரசு புறம்போக்கு நிலத்தின் அருகேயுள்ள தங்களது நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தை இவர்கள் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரிக்க, வருவாய்த் துறை அதிகாரிகள் குழுவினர் மேல்மிடாலம் சென்றனர். குறிப்பிட்ட நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்தபோது, ஜோசப், பால்துரை, சுபிதா மற்றும் அவர்களின் உறவினர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக ராஜேஷ்குமார் எம்எல்ஏ, ஆமோஷ், டிட்டோ ஆகியோரும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது, அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, தாக்குதல் நடத்தியதாக, ராஜேஷ்குமார் எம்எல்ஏ, ஆமோஷ், டிட்டோ, ஜோசப், பால்துரை, சுபிதா ஆகிய 6 பேர் மீது, கருங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 11 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய ஜோசப், பால்துரை, டிட்டோ ஆகியோர் ஏற்கெனவே இறந்து விட்டனர்.
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்கிய குற்றத்துக்காக ராஜேஷ்குமார் எம்எல்ஏ, ஆமோஷ், சுபிதா ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து, முதன்மை உதவி அமர்வு நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பளித்தார்.