சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெறுவதை எதிர்த்தும், இம்மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும் நீலகிரியில் காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை ஆளுநர் பறித்துக் கொண்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பின்படி அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் அவருக்கு கிடையாது என மிகத் தெளிவாக தீர்ப்பை கூறிய பிறகும், தமிழக ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவதாக தெரியவில்லை. இந்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதை அனைவரும் அறிவார்கள்.
ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தலைநகர் டெல்லி சென்று, அவரை சந்தித்த பிறகு வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு மூன்று நாட்கள் நீலகிரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானதோடு, இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு கூட்டுச் சதியை அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற செயலாகும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களில் வேந்தராக முதல்வர் இருக்கிற வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து அது சட்டமாக நிறைவேறி தமிழக முதல்வர் வேந்தராக பொறுப்பேற்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டு தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு சட்டவிரோதமானது. இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரியில் நடைபெறுவதை எதிர்த்தும், இம்மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சட்டவிரோதப் போக்கை கண்டிக்கிற வகையிலும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர். கணேஷ் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.