மேல்மலையனூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!


ககன்தீப் சிங் பேடி | கோப்புப்படம்

விழுப்புரம்: மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எதப்பட்டு, எய்யில், கூடுவாம்பூண்டி, மேல்புதுப்பட்டு, மேல்வயலாமூர், நாரண மங்கலம், சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, தென்பாலை, துரிஞ்சிப்பூண்டி ஆகிய கிராமங்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள கோரப்பட்டிருந்த டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெறும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நோக்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், வரும் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 2025-26-ம் ஆண்டில் 2,338 கிராம ஊராட்சிகளில் ரூ.1,091.38 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் திட்டத்தின்கீழ் பெற்ற அனுபவம் அடிப்படையில் குளங்கள், ஊரணிகள் புனரமைப்பு, பொது பயன்பாட்டுக் கட்டிடங்கள், சமத்துவ சுடுகாடு, இடுகாடுகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள், தெருக்கள், வீதிகள் மேம்பாடு, தெருவிளக்குகள், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகள் ஆகிய 6 பிரிவுகளுக்கு இடையில் ஒதுக்கீட்டை வட்டார அளவில், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும். இந்த ஒதுக்கீட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எதப்பட்டு, எய்யில், கூடுவாம்பூண்டி, மேல்புதுப்பட்டு, மேல்வயலாமூர், நாரண மங்கலம், சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, தென்பாலை, துரிஞ்சிப்பூண்டி ஆகிய கிராமங்களில் பல்வேறுப் பணிகளை மேற்கொள்ள ரூ 2.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 5-ம் தேதி நாளிதழில் ஒப்பந்தபுள்ளி கோரி விளம்பரம் வெளியிடப்பட்டது. அவ்விளம்பரத்தில் கடைசி தேதி இம்மாதம் 14-ம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தபுள்ளி நடைமுறை தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகள் ஒளிவின்மை சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளி விதிகள், 2000 ஆகியவற்றிற்கு முரணாக போதிய கால அவகாசம் வழங்கப்படாமலும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் பதிவு பெற்றுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி நமுனாக்களை அனுப்பாமலும் நடைபெறுவதாலும் சட்ட விதிகளை பின்பற்றாமல் நடைபெறுவதாலும் டெண்டருக்கு தடை விதிக்க வேண்டி ஒப்பந்ததாரர்கள் சத்தியராஜ் மற்றும் தனம்சேகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி சத்தியநாரயண பிரசாத் அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் இந்த ஒப்பந்தபுள்ளிக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

x