டாஸ்மாக் ஊழியர்களின் 21 ஆண்டு கோரிக்கைகளை பேரவையில் அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்


மதுரை: மதுரையில் இன்று டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் டாஸ்மாக்கில் 21 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதற்கு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயளாலர் டி.சிவக்குமார் தலைமை வகித்தார். மேலும், அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் மருத்துவ திட்டத்தை திரும்பபெற்று, இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கையை வரையறை செய்து பணி நிரவல் செய்ய வேண்டும்.

மாவட்ட அளவிலான இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கும் அதிகாரத்தை மண்டல மேலாளர்களுக்கு வழங்க வேண்டும். காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமலாக்கத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மாற்று திட்டம் உருவாக்க வேண்டும். அது வரை மற்ற மாவட்டங்களில் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள நிரந்தர காலி பணியிடங்களை கடை ஊழியர்களை கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயலாளர் இரா.லெனின் துவக்கி வைத்தார். இதில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகாலிங்கம், ஏஐசிசிடியு நிர்வாகி அழகுமலை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ் நிறைவு செய்து பேசினார். ஏஐசிசிடியு நிர்வாகி வேல்முருகன் நன்றி கூறினார்.

x