நாகை: வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்க சித்தர் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அருகேயுள்ள வடக்கு பொய்கைநல்லூரில் பிரசித்திபெற்ற கோரக்க சித்தர் கோயில் அமைந்துள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நாகையிலிருந்து அக்கரைப்பேட்டை வழியாகவும், திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளிலிருந்து கருவேலங்கடை வழியாகவும் வடக்கு பொய்கைநல்லூருக்கு வரலாம்.
தற்போது, அக்கரைப்பேட்டையில் ரயில்வே உயர் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கருவேலங்கடை வழியாகவே கோரக்க சித்தர் கோயிலுக்கு சென்று வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், கருவேலங்கடையில் இருந்து கோரக்க சித்தர் கோயில் வரை உள்ள 2 கிலோ மீட்டர்தொலைவு உடைய பத்மநாபன் சாலை எனப்படும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த சாலையில் பயணிப்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சாலையின் பல்வேறு இடங்களில் உள்ள சிறுசிறு பள்ளங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிலர் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் அப்பகுதியினர், உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த சாலையை உயர்த்தி, சீரமைத்து புதிதாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.