விருதுநகர்: அருப்புக்கோட்டை பங்குனி பூக்குழி திருவிழாவில் தீ குண்டத்தில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி கடந்த 16-ம் தேதி நடந்த பூக்குழி விழாவில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதில் முத்துக்குமார் (42) என்ற பக்தர் பூ இறங்கும்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்து காயமடைந்தார். அவரை தீயணைப்புத் துறையினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு முத்துக்குமார் கொண்டு செல்லப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.