ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சேதமடைந்த ஓவியங்கள்: பக்தர்கள் வேதனை


ஶ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் பிரகாரத்தில் சேதமடைந்துள்ள திவ்ய தேச பெருமாள் ஓவியங்களை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வார் மகளாக வளர்ந்த ஆண்டாள், சிறு வயதிலிருந்தே பெருமாளுக்கு தொடுத்த பூ மாலையை சூடிப்பார்த்து, பெருமாளை மணாளனாக ஏற்றுக்கொண்டார். மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்த ஆண்டாள், பங்குனி உத்திர நாளில் ஶ்ரீரங்கம் ரெங்கநாதரை மணந்தார்.

ஆண்டாள் 108 திவ்யதேச பெருமாள்களை பூமாலையாக சூடியிருப்பதாக ஐதீகம். இதை குறிக்கும் விதமாக, ஆண்டாள் சந்நிதியைச் சுற்றி உள்ள பிரகாரத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் உள்ளிட்ட 108 திவ்ய தேச பெருமாள் உருவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

ஆண்டாள் சந்நிதி எதிரே பிரகாரச் சுவற்றில் உள்ள ஆண்டாள் துளசி செடியின் அடியில் அவதரித்த ஓவியம் மற்றும் தெற்கு பிரகாரத்தில் உள்ள ஒரு பெருமாளின் ஓவியம் ஆகியன சேதமடைந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த ஓவியங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஆண்டாள் கோயில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பில் உள்ளது. ஆண்டாள் கோயிலில் எந்த பணியையும் செய்வதற்கு தொல்லியல் துறையிடம் அனுமதி பெறவேண்டும். சேதமடைந்த ஓவியங்களை சீரமைக்க தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றனர்.

x