சிவகங்கை: திருப்புவனம் பேரூராட்சியில் கழிப்பறை கட்ட ஒதுக்கிய இடத்தில் தண்ணீர் தெட்டி கட்டப்பட்ட நிலையில், கழிப்பறைக்கு ஒதுக்கிய ரூ.15 லட்சம் எங்கே ? என கேள்வி எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி 4-வது வார்டில் கீழரத வீதி தினசரி சந்தை பகுதியில் கழிப்பறை கட்ட 2021-22-ம் ஆண்டுக்கான 15-வது நிதிக் குழு மானியத்தில் ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் கழிப்பறை கட்டப்படாத நிலையில், கடந்த ஆண்டு இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதற்கு கழிப்பறை கட்ட ரூ.15 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிவடையும் என பேரூராட்சி நிர்வாகம் பதிலளித்து இருந்தது. ஆனால் அதன் பின்பு ஓராண்டாகியும் இதுவரை கழிப்பறை கட்டவில்லை. ஆனால் கழிப்பறை கட்ட ஒதுக்கிய இடத்தில் தண்ணீர தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதனால் குறைவான இடமே உள்ளது. அதிலும் பழைய கழிப்பறை கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிப்பறைக்கு ஒதுக்கிய ரூ.15 லட்சம் எங்கே என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து ஒப்பந்ததாரர் தரப்பினரிடம் கேட்டபோது, ‘கழிப்பறை கட்ட ஒதுக்கிய பகுதியில், பாதி இடத்தில் தண்ணீர் தொட்டியை கட்டிவிட்டனர். இதனால் குறுகிய இடமே உள்ளது. மேலும் அந்த இடத்தில் உள்ள பழைய கழிப்பறையையும் அகற்றி, இடத்தை ஒதுக்கி தரவில்லை’ என்றனர். இது குறித்து கேட்பதற்காக பேரூராட்சி நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை.