விருதுநகர் அதிர்ச்சி: மார்ச் மாதத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பாக 14 வழக்குகள் பதிவு


விருதுநகர்: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சிறுமிகள் திருமணம் தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 18 வயது நிறைவடையாத சிறுமிகள் திருமணம் தொடர்பாக 1098 அல்லது 181 மூலம் புகார்கள் வந்தன. அது குறித்து சமூக நல களப் பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கர்ப்பமடைந்தால், கணவனுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x