ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் கொலை வழக்கு ஒன்றில் 31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் சவுத்ரி என்பவர் 1994-ம் ஆண்டு பணியாற்றினார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. சவுத்ரியுடன் பாஸ்கர் ஜோதி கோகோய் என்பவர் பணியாற்றி வந்தார். சவுத்ரி தனது நண்பருடன் சேர்ந்து மனைவி ஜெயஸ்ரீயை கொலை செய்து விட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்த வழக்கு குறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் சவுத்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில் ஏ-1 குற்றவாளிக்கு 2005ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சவுத்ரி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளி பாஸ்கர் ஜோதி கோகோய் தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில், அரக்கோணம் துணைக் காவல் கண்காணிப் பாளர் ஜாபர் சித்திக் வழிகாட்டுதலின்படி, அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் தங்ககுருநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் 2-வது குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகோய் என்பவரை தேடி வந்தனர்.
தொடர்ந்து, அசாம் மாநிலம் திப்ருகார் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியை, கடந்த 18ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து, அவரை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.