கலசப்பாக்கம் அருகே மயானத்தில் நடைபெற்ற மாந்திரீக பூஜை: கிராம மக்கள் அச்சம்


திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே மயானத்தில் நள்ளிரவு நடைபெற்ற மாந்திரீக பூஜையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் அருகே, காஞ்சி கிராம எல்லையில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு மாந்திரீக பூஜை நடைபெற்றுள்ளது. இந்த பூஜையை சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நடத்தியதாக கூறப்படுகிறது. கோழி, பன்றி போன்றவற்றை பலி கொடுத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

பொழுது விடிந்ததும், மயானத்தில் உயிரினங்கள் பலி கொடுக்கப்பட்டு மாந்திரீக பூஜை நடைபெற்றிருப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நரபலி பூஜை நடைபெற்றிருக்கலாம் என்ற தகவல் பரவியதால், கிராம மக்களிடம் அச்சம் ஏற்பட்டது. கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ஒருவர், மாந்திரீக பூஜைகளை செய்து வருவதால், அவர் மீது கிராம மக்கள் சந்தேகமடைந்தனர்.

மேலும், கீழ்பாலூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் புகைப்படத்தை வைத்து மாந்திரீக பூஜை செய்யப்பட்டதாக கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதையறிந்த கடலாடி காவல்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இருவர் மற்றும் மாந்திரீகவாதி ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x