திருநெல்வேலி: பணகுடி அருகே உள்ள கடம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (33). இவர் இளநீர் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஆர்த்திகா (8), ரித்திகா (6), முத்து நிவிஷா (3), வைதீகா (1) என 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஷ் கண்ணனுக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதால், ராஜேஷ் கண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். வேதனை அடைந்த புவனேஸ்வரி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதனால் அவர்கள் வீட்டில் மயங்கி கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வீட்டுக்கு சென்ற ராஜேஷ் கண்ணன், தானும் விஷம் குடித்துள்ளார்.
உடனடியாக அவர்கள் 6 பேரையும் உறவினர்கள் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.