தூத்துக்குடி: திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் தாய் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல் வட்டம் ராஜபதி வடக்கு தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் கார்த்திகேயன் (38). கணியான் கூத்து கலைஞரான இவரது 3-வது தங்கை மஞ்சுளா (23). இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நம்பிபத்து நாராயணசாமி கோயில் தெரு டேனியல் ஜெபசெல்வத்துக்கும் கடந்த 2023ம் ஆண்டு செப்.3ம் தேதி திருமணம் நடந்தது.
7 மாத கர்ப்பிணியான மஞ்சுளாவை பிரசவத்துக்காக பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். கடந்த 16-ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்படவே திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு 9.10 மணியளவில் அவருக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இரவு 11.45 மணியளவில் மஞ்சுளாவுக்கு அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் மஞ்சுளா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து வழக்கு பதிவு செய்தார். சம்பவம் குறித்து டிஎஸ்பி மகேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தாயையும், குழந்தை யையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை உயிரிழந்தது. தற்போது சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.