குற்றாலம் அருவிகளில் குறைவான நீர் வரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் மழைக் காலங்களில் நீர் வரத்து ஏற்பட்டாலும், தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பொழியும் சாரல் மழை, குளுமையான தென்றல் காற்று, வானில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும்.

இதனால் சாரல் சீஸன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். வறட்சி காலங்களில் அருவிகள் வறண்டு காணப்படும். ஆனால், கடந்த 11 மாதங்களாக குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவை வறண்டு போகாமல் தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இந்த அருவிகளில் நீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் வரிசையில் நின்று அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவிகளில் குறைவாக நீர் வரத்து இருந்ததால் மகிழ்ச்சியாக குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் குளிர்ச்சியான அருவி நீரில் குளிப்பது உற்சாகம் அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

x