சந்தைக்கு வரத்து அதிகரிப்பு: காலிஃபிளவர் விலை சரிவு


கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் கோடை மழை காரணமாக ஒரே நேரத்தில் காலிஃபிளவர் அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ளது. இதனால், சதைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது. இந்நிலையில், கிடைத்த விலைக்கு வீதிகளில் கூவி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதினா, கேரட், வெண்டை, முட்டை கோஸ், கொத்தமல்லி, தக்காளி, காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், வேப்பனப்பள்ளி, சென்னசந்திரம், குருபரப்பள்ளி, சூளகிரி, உத்தனப் பள்ளி, பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் காலிஃபிளவர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை மழையால் ஒரே நேரத்தில் காலிஃபிளவரை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.

இது தொடர்பாக வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: சூளகிரி, ராயக்கோட்டை பகுதிகளில் உள்ள நர்சரிகளில் இருந்து காலிஃபிளவர் நாற்றுகளை வாங்கி வந்து சாகுபடி செய்தோம். இச்சாகுபடி யைப் பொறுத்த வரை ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது.

வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் காலிஃபிளவர், ராயக்கோட்டை, ஓசூர் காய்கறி சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களில் கொள்முதல் செய்து வாகனங்கள் மூலம் பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில், வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள காலிஃபிளவர் வயல்களில் தேங்கும் மழை நீரால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் ஒரே நேரத்தில் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மகசூலும் அதிகரித்துள்ளது.

நுகர்வு தேவைக்கு அதிகமாக சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஒரு மூட்டை (20 முதல் 25 பூக்கள்) ரூ.800-க்கு மேல் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது, தரத்தைப் பொருத்து, ஒரு மூட்டை ரூ.250 வரை கொள்முதல் செய்கின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடையைத் தவிர்த்தால் மேலும் இழப்பு ஏற்படும் என்பதால், பல விவசாயிகள் அறுவடை செய்து நேரடியாக வாகனங்கள் எடுத்துச் சென்று கிடைக்கும் விலைக்கு தெருக்களில் கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x