நீங்களும் தொழில் தொடங்கலாம்... வற்றல், மூலிகை சோப் தயாரிக்க கிண்டியில் ஏப்.24, 25ல் பயிற்சி!


சென்னை: கிண்டியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக மையத்தில் வடகம், வற்றல், மூலிகை சோப் தயாரிக்க வரும் 24, 25ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இது குறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல், பயிற்சி மையத்தில் ஏப்ரல் 24ம் தேதி வற்றல், வடகம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஜவ்வரிசி, தக்காளி, பூண்டு, உருளைக்கிழங்கு, புதினா, கொத்தமல்லி வகை வடகங்கள், வெண்டைக்காய், மணத்தக்காளி, சுண்டைக்காய் வகை வற்றல்கள், மோர் மிளகாய் ஆகியவை தயாரிக்கும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.

ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் மூலிகை சோப் தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் பஞ்ச காவ்யா, ஆரஞ்சு - வாழைப் பழம் மிக்ஸ், நலங்கு மாவு, குப்பை மேனி, ரோஸ், சந்தன ஆயில், பால், ஆவாரம்பூ - கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பாதாம், குங்குமப்பூ ஆயில் ஆகிய வகையில் சோப் தயாரிக்க கற்றுத்தரப்படும்.

தொழில் முனைவோர், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், சுய உதவி குழுவினர் என அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x