கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மகளிர் சுயஉதவிக் குழுவினரிடையே பணம் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் குழுத் தலைவி வீடு சூறையாடப் பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பெரியானூர் கிராமத்தில் ஜெய ஸ்ரீ எனும் பெயரில் 20 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் தலைவியான ஜெயந்தி என்பவர் கடந்த மாதம் குழுவின் மூலமாக வங்கியில் இருந்து ரூ.7 லட்சம் கடன் பெற்றார். அந்தத் தொகையை குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்காமல், தலைவி மற்றும் துணைத் தலைவி ஆகியோர் பிரித்துக் கொண்டதாகக் கூறி, குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில், குழு உறுப்பினர்கள் 20 பேர் உள்ள நிலையில் ரூ.7 லட்சம் மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள ரூ.3 லட்சம் வந்த பின் அனைவருக்கும் சமமாக கடன் தொகை பிரித்தளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் எஞ்சிய தொகை வராததால் ரூ.7 லட்சத்தை வங்கியில் திருப்பி செலுத்தி விட்டதாக குழுத் தலைவி ஜெயந்தி கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் இரவு குழுத் தலைவி ஜெயந்தியின் வீடு புகுந்து வீட்டிலிருந்த உடமைகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இது குறித்து ஜெயந்தி நேற்று காலை திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் எதிர் தரப்பினரும் புகார் அளித்தனர். புகாரளிக்க வந்த இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர், போலீஸார் முன்னிலையில் அவதூறாக பேசியும், தாக்க முற்பட்ட சம்பவமும் நடந்தது. பின்னர் காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.